Saturday 27 August 2011

ரகசிய தோழி தீபாவுக்கு ...!

இரவு மணி 11.00. நிலா FM ரேடியோ 101.25 . வரப்போகும் நிகழ்ச்சிக்கேற்றார் போல் இசையும் அந்தரங்கமாய் ஒலித்தது.

தீபா இந்த நிகழ்ச்சியின் செல்ல ஸ்டார். காரணம் அவளின் குரல்.ரொம்பவும் சினேகமானது. இந்த நிகழ்ச்சிக்கு base வாய்சில் பரிவோடு பேசுவது கேட்பவர்களின் மனதை லேசாக்கிவிடும்.

அடுத்த முக்கியமான காரணம் FM தொகுப்பாளினிக்கே உரித்தான பாசாங்குத்தனம் இல்லை.தன் சொந்தப் பிரச்சனைகள் போல் அணுகுவாள்.இதனால் நேயர்களுக்கு செல்லமாகிப்போனாள்.

”சந்தோஷத்த யார்கிட்டயாவது ஷேர் பண்ணினால் அது டபுளாகும். அதே மாதிரி துக்கத்த ஷேர் பண்ணிக்கிட்டா பாதியாக குறையும்னு சொல்வாங்க.அதேதான் இந்த புரோகிராம்மின் நோக்கமும். உங்களுடைய ரகசியமான விஷயங்களை என்னோட தயக்கமில்லாம ஒரு பிரண்ட்லியா ஷேர் பண்ணிக்கிறீங்க.அதற்கு மில்லியன் தேங்கஸ் சொல்லிட்டு இன்னிக்கு புரோகிராம்ம ஆரம்பிக்கிறேன்”

”இன்னிக்கி என்னோட”ரகசிய தோழி தீபாவுக்கு அன்புடன்” நிகழ்ச்சிக்கு நுங்கம்பாக்கத்திலிருந்து அரவிந்த் என்பவர் கடிதம் எழுதி இருக்காரு.அவரு என்ன சொல்ராருன்னு இப்போ பாக்கலாம்”

ரகசிய தோழி தீபாவுக்கு,

என் அந்தரங்கத்தை யாரிடமாவது கொட்டவேண்டும்.அதுவும் ஒரு மூன்றாவது மனுஷியிடம். கேட்பதற்கு நீ ஒருத்தி இருக்கிறாய் என்றதுமே மனதில் ஒரு ஆறுதல்.புலம்பலில் ஒரு வித self pity இருக்கும் .அதை எனக்காகப்பொறுத்துக்கொள்.அதுதான் உண்மை.நான் ஒரு தப்பும் செய்யவில்லை.

கொட்டுவதால் பாரம் குறைந்துவிடும் என நம்புகிறேன்.சரி விஷயத்திற்கு வருகிறேன்.

நான் (பொது துறை) அலுவலகத்தில் வேலையில் இருந்தேன்.என் துறை சம்பந்தமாகத்தான் உமாவும் என் அலுவலகத்திற்கு அடிக்கடி வருவாள். அவள் வேறு ஒரு தனியார் நிறுவனம்.

அலுவலக சம்பந்தமாக interact செய்ய என்ற பெயரில் அடிக்கடி சந்தித்தோம்.என்னை அவளுக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று.கிறங்கிப்போய் காதலில் விழுந்தாள்.
ஒருத்திக்கு என்னைப் பிடித்துப்போயிற்று என்ற மிதப்புலேயே நானும் கிறங்கிப்போய் அதே காதலில் குஷியாக விழுந்தேன்.

அன்று முதல் பூமி புதிதாக சுற்றத்தொடங்கியது.

அவளை அப்படி லவ் பண்ணினேன்.தினமும் போனில் பேச விட்டால் என்னனோ மாதிரி இருக்கும்.. மேரேஜ்னா அவளைத்தான் என்று நிச்சயமே செய்துவிட்டேன்.
அவளைப் போல் இன்னொருத்தி கிடைப்பாளா?கடவுளாக போட்ட முடிச்சு என்று தினமும் ஒரு முறையாவது  சாமிபுத்திப் போட்டுக்கொள்வேன் படுப்பதற்கு முன்.

ரகசியமாக சந்தித்தோம்.அவளின் i10 காரின் கலரை நான்தான் செலக்ட் செய்தேன். அதில் ஊர் சுற்றினோம்.காதல் சினிமா பாட்டுக்கள் எல்லாம் ரொம்ப முக்கியமாகப்பட்டு பிடித்துப்போயிற்று. கல்யாணம்,ஹனிமூன்,குழந்தைகள் என எதிர்காலத்தையும் பிளான் செய்தோம்.மொத்தத்தில் 24/7 குஷியாகவே இருந்தோம்.(ஹாய்...தீபா ! எழுத எழுத ப்ரெஷர் குறைந்து மனசு லேசாகிறது).

ஆனால் அவளின் ரிச்னெஸ் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டேதான் இருந்தது.

அருகாமை  தந்த அவள் வாசனை ஒரு கட்டத்தில்  காமமாக மாறியது.அவளுக்கும் அதே பீலிங்க்தான்.அவள் காட்டிக்கொள்ளவில்லை.திருமணம் தவிர வேற வடிகால் இல்லை.திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.அவள் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தாள்.எனக்கு புதிராக இருந்தது.

அடுத்த சில மாதங்களில் சந்திப்பு குறைந்தது.செல்லிலும் தொடர்பு குறைய ஆரம்பித்தது. பல முறை வலிய போய் காதல் பாராட்டினேன்.அவள் கண்டுகொள்ளவில்லை. அவளின் போக்கு  என்னை ஷாக் ஆக்கியது.

அவள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்ற நினைப்பு  அடி வயிற்றில் புளியை கரைத்தது.ஒரு கட்டத்தில் செல் நம்பரும் மாற்றி விட்டாள்.கம்பெனியையும் விட்டு விட்டாள்.அவளை டிரேஸ் செய்யவே முடியவில்லை.மனம் நொ்ந்து போனேன் .

இனி வரும் காலத்தை எப்படி ஓட்டப்போகிறேன் தீபா?.ஒன்றும் புரியவில்லை.ஆனால் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் தீபா .கிடைக்கமாட்டாள் என்கிறது என் உள்மனசு தீபா.

உமா என்னை ஏன் மறந்தாள் தோழி தீபா?

அன்புடன்,

அரவிந்த்
நுங்கம்பாக்கம்

படித்து முடித்ததும் மூட் அவுட ஆனாள் தீபா.ஒருவாறு
சமாளித்து அரவிந்தனுக்காக, தன் பரிவான குரலில் பத்து நிமிடங்கள் ஆறுதலாகப்  பேசினாள்.அவளை மறந்து புது வாழ்க்கை தொடங்குமாறு தேற்றினாள்.

தான் பேசியது அரவிந்த் கண் முழித்துக் கேட்டிருப்பானா?வாட் அபொவுட் உமா?சான்ஸே இல்லை.

(இந்த ஒருவருடத்தில் இதுதான் பெஸ்ட் என்று அலுவலகத்தில் மறு நாள எல்லோரும் பாராட்டினார்கள்)

புரோகிராம் முடிந்தாலும் அரவிந்தின் கடிதம் மனதை போட்டு உலுக்கத்தான் செய்தது.அவனைப்போய் பார்க்கலாமா? அலுவலகத்தில் இதற்கு அனுமதி இல்லை.ஏன் உமா ஏமாற்றினாள்.குழம்பியபடியே மறுநாள் ஏழு ஆறு மணிக்குத்தான் தூக்கம் வந்தது தீபாவுக்கு.

அடுத்த நாள் மதியம் 1.00.தீபாவுக்கு பொது தொலைபேசியில் இருந்து போன் வந்தது.

“வணக்கம். ஐ ஆம் உமா. ஆர் யூ தீபா அஃப் நிலா FM 101.25? "

"வணக்கம். எஸ் உமா. யூ ஆர் ரைட்...நீங்க அந்த அரவிந்த்.....?

”ஆமாம்... அத பத்தி பேசனும்.நீங்க தனியா வர முடியுமா?”

 “ஒகே”

”கண்டிப்பா தனியாத்தான் வரணும்.அப்பத்தான் ப்ரீயா பேசலாம்”

“சத்தியமா”

மிகுந்த சந்தோஷமும் அதே சமயம் ஒரு ஒரத்தில் கிலியுமாக மனதில் ஓடியது. உமா அட்ரஸ் சொன்னாள்.அது அரவிந்த் அட்ரஸ். அரவிந்த் உமா குரலில் பேசுகிறானா?ஏன் தனியாக வரச் சொல்கிறாள்.போலியா?வேறு ஏதாவது நெட்வொர்க்கா?இது புது அனுபவமா இருக்கே?

ஹாண்ட்பாக்கில் பெப்பர் ஸ்பரே,மற்ற தற்காப்பு சாதனங்கள் எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டாள்.புது கணவன் மணி வண்ணனைத் துணைக்குஅழைத்துக்கொண்டாள்.கணவனிடம் மேலோட்டமாகத்தான் விஷயத்தைச் சொல்லி இருந்தாள்.

காரில் கிளம்பினார்கள். அரவந்தனின் கடிதம் போகும் வழியெல்லாம் படுத்தி எடுத்தது.

கணவனை காரோடு ஒர் இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு அந்த வீட்டை நெருங்கினாள்.தனி வீடானாலும் அழகாக இருந்தது.சூடிதாரில் ஒரு பெண் நின்றிருந்தாள்.அவள்தான் உமாவா? பயத்தில் உடம்பு சற்று உதறியது.

 ”ஹாய்...தீபா!”

“ ஹாய் உமா!”

நட்பாகச் சிரித்து கையை பிடித்துக்கொண்டாள்.பார்த்ததும் பிடித்துப்போயிற்று.இப்படித்தான் அரவிந்தனையும் கவர்ந்திருப்பாளோ?

மாடிக்கு அழைத்துக்கொண்டுபோனாள்.நுழைந்த்தும் மல்லிகைப்பூ வாசனை கிறங்கடித்தது.அது பெட்ரூம்.உட்கார வைத்துவிட்டு உள்ளே போனாள்.அறை சுத்தமாக இருந்தது.தனக்காக அவசரமாக சுத்தம் செய்த மாதிரி தெரியவில்லை.விலை உயர்ந்த style SPA படுக்கை.ஏசி அணைக்கப்பட்டு பேஃன் ஓடிக்கொண்டிருந்த்து.அவள் தன் குரலைக் கேட்கும் மியூசிக் சிஸ்டம் எங்கே?

சிறிது நேரம் ஓடியது.உமா எங்கே?ஆள் அரவமே இல்லை .ஒரு கெஸ்டை வெயிட் பண்ண வைத்துவிட்டு....லூசாக இருப்பாளோ?எதற்கு பெட்ரூமில் சந்திக்க வேண்டும்?

ஹாண்ட் பேக்கில் இருந்து பெப்பர் ஸ்ப்ரேயை  கட்டிலில் வைத்து ஹாண்ட் பேக்கால் மூடி மறைத்தாள்.

யோசனையை கலைத்தது கொலுசு சத்தம்..அவள்தான்.முதலில் பார்க்கும்போது கொலுசு இல்லையே? மெலிசான ஹவுஸ்கோட்டில்இருந்தாள்.கை, கழுத்து பகுதிகள் வெண்மை நிறத்தில் பளிரென அடித்தது.மேல் உள் ஆடைகள் அரசல் புரசலாக தெரிந்தது.தலையில் கோணல்மானலாக மல்லிகைப்பூவைச் சொருகி இருந்தாள்.ஒரு ஆணை கணத்தில் விழ்த்தக்கூடிய நிலையில் தோற்றமளித்தாள்.

இப்படியா  ஒரு விருந்தாளியை சந்திப்பாள்?அதுவும் ஹவுஸ்கோட் கணுக்காலுக்கு மேல்தான் இருநதது. இட் இஸ் டூ பேட் உமா...!

புன்னைகைத்தபடியே ஹாண்ட் பேக்கில் கைவிட்டு செல்லை எடுத்தாள். தன் கணவனின் நம்பரை அழுத்த ரெடியாக செட் செய்து உள்ளம் கையில் வைத்துக்கொண்டாள்.

வேறு சில அறிமுகத்திற்கு பின் லெமன் ஜூஸ் குடித்து பேச்சு ஆரம்பம் ஆனாது.பக்குவமாகத்தான் பேசுகிறாள்.தெளிவும் இருந்தது.நார்மல்தான்.

தீபாவுக்கு  பயம் போய் சகஜமானாள்.

”நாந்தான் அரவிந்த்....”உமா சிரித்தபடி சொன்னாள்.

”அப்படியா?” சற்று அதிர்ச்சியாகி அவளைப் உற்றுப்பார்த்தாள்,

“சாரி..டு ஆஸ்க் யூ..! ஆர் யூ  அ டிரான்ஸ்ஜெண்டர்?(திருநங்கை)

“இல்ல தீபா. நா ஒரு நார்மல் பொண்ணுதான்” மெலிதாக சிரித்தாள்.

“ஜஸ்ட் தெரிஞ்சுகலாம்னுதான்...சாரி”

தான் கேட்டதை உமா ரொம்ப அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

"நாந்தான் அரவிந்தன்ர பேர்ல எழுதினேன்.ஆனா காதல்ல ஏமாந்துபோனது நான்”

”ஓ.. ரியல்லி உமா! அன்பிலிவபுள்!.....ஏன் அப்படி?”

”அவன் ஏமாந்தான்னா எப்படி நொந்து எழுதுவான்னு ஒரு பீலிங்.ஒரு பொண்ணு புலம்பினா ரொட்டீனா போய்டும.அதான்...ரொமப சாரி தீபா.குழந்தத்தனமா பண்ணிட்டேனோ...ஒரு வேகம்தான் ரீசன்”

ஒரு  மணி நேரம் பேச்சு ஓடியது. தீபா தன் வழக்கமான FM சினேக குரலில்  ஆறுதல் சொன்னாள்.

”தீபா...உன்னோட குரல் ....so cute.... I love it...தீபா.நைண்டி பர்செண்ட் ரிலிவுட்”

”தாங்கஸ் உமா” சொல்லி தொடர்ந்தாள் “இப்ப ஓகேதானே...அதுலேந்து வெளில வந்திட்ட இல்ல.இது மாதிரி ஏமாந்தா யாராலேயும் தாங்க முடியாது.இட் இஸ் ட்ரூ.எனக்கு  இதோட வலி தெரியும் ”

“ஆல் மோஸ்ட் வந்தாச்சு. அவன பாத்து ”ஏண்டா இப்படின்னு”டீசண்டா கேட்கணும்னு ஆச. ஆனா முடியல..”

”ஆனது ஆகிவிட்டது.நீ பழச மறந்துட்டு மேரேஜ் பண்ணிட்டு சந்தோஷமா லைஃபல செட்டில் ஆயிடு.”

”அந்த முடிவுக்கு வந்து ஒரு வாரம் ஆயிடுச்சி.சீக்கிரம் மேரேஜ்.டும்..டும்..டும்”

“ஓ கிரேட்..!.மேரேஜ்ஜுக்கு கட்டாயம் வருவேன்.கிளம்பரேன்.”

 “கட்டாயம் வாங்க.இப்ப நீங்க தனியா வரலைன்னு தெரியும்.கார்ல.....?”

“எஸ்...என் ஹஸ்பெண்டுதான் வெயிட் பண்றாரு”

“எதுக்கு அவ்வளவு தூரம் நடக்கனும். அவரு செல்லுல கூப்பிடுங்க?’

“வேணாங்க.... நான் நடந்தே போய்டுரேன்....”

”தீபா ...ப்ளீஸ்... கால் ஹிம்”

”உமா....அவரு வந்த இன்னும்  உன்னோட டைம்தான் வேஸ்ட் ஆகும்”

“தீபா ...ப்ளீஸ்... கால் ஹிம்”

எப்படி இந்த கவர்ச்சி உடையில்?அதுவும் தன் கணவனை பார்க்கத் துடிக்கிறாள்?சரியான லூசா?இட் இஸ் டூ பேட் உமா...!வேண்டா வெறுப்பாக செல்லில் அழைக்க மணிவண்ணனும்  வந்தான்.தீபா அறிமுகப்படுத்தினாள்.

சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு கிளம்பினார்கள்.உமாவின் மேல் சொல்ல முடியாத மனத்தாங்களுடன்தான் தீபா வெளியேறினாள்.

ஆறு மாதம் கழித்து உமாவின் திருமண அழைப்பிதழ் தீபாவுக்கு வந்தது. தீபா பிரித்தாள். ஆர்வமுடன் மணமகன் பெயரைப் பார்த்தாள்.


 Uma  Weds Aravind

"உமா...கில்லாடியா இருப்பா போல!அவனேயே கண்டுபிடிச்சு கைப்பிடிச்சுட்டாளே” மணிவண்ணன்

”காதல்ன்னு விழுந்துட்டான்.அவளை ஒர் அளவுக்கு இப்படியும் அப்படியுமாக அனுபவித்து இருக்கிறான். ஒவரா ”காட்ட” ஆரம்பிச்சுவுடனே இது நமக்கு சரி வராதுன்னு தலை மறைவா ஆயிட்டு  மறுபடியும் மாட்டிக்கிட்டான்” தீபா

“ஒரு வேள  நாம உமாவை அன்னிக்குப் பாத்த போஸ்லயே போய் அரவிந்த மடக்கி இருப்பாளோ?” மணிவண்ணன்

                                         முற்றும்
 ______________________________________________________________

 இந்த கதைக்கு இன்னொரு முடிவு.

ஆறு மாதம் கழித்து உமாவின் திருமண அழைப்பிதழ் தீபாவுக்கு வந்தது. தீபா பிரித்தாள். ஆர்வமுடன் மணமகன் பெயரைப் பார்த்தாள்.

Uma  Weds Kishore

கிஷோர்! பலவாறு உறுதி செய்துக்கொண்டாள்.அதே கிஷோர்தான். விடுவிடுவென்று ஓடி தன் கணவனிடம் காட்டினாள்.

“உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணாத ஏமாத்தின கிஷோரா?”

”ஆமாம் ..!அதே கிஷோர்தான்”

                                                               முற்றும்

No comments:

Post a Comment