Saturday 3 September 2011

ஒழிந்து போ


நம் வசந்த காலங்களை
என் கசந்த காலங்களோடு ஒப்பிடும் போது...
அது என் வாழ்வில் எவ்வளவு பெரிய பொற்காலம் என
இப்போதும் உள்ளே உணர்வுத் திரியில் ஒளிர்கிறது...

உன் நினைவுகள் எனக்குள் விழித்தெழுந்து
என்னையே எரித்துவிட்டு போய்விடுகிறது...
பஸ்பமாகி, சாம்பலாகிய பின்புதான்
இன்னொரு பிறவியாய் எனக்குள் எழுகிறேன்...

விட்டுச் சென்ற உன் காலடிச் சுவடுகளில்
கடைசியாய் நீ வெட்டிச்சென்ற
நிமிடங்கள்தான் என் நினைவுகளில்
சிவப்புக்கம்பளம் போர்த்துகிறது..

ஏன் எனக்குள் அடிக்கடி விழிக்கிறாய்...
எத்தனையோ நினைவுகள்
மறைந்து, மறந்து, மறத்து போன போது...
நீயும் அத்தோடு தொலைந்து போவாய் என்று எண்ணியிருந்தேன்...

ஆனால், நினைவுகளில் தொலைந்து போக
வேண்டியவைகள் தான் அதிகமாக வந்து
ஞாபக விளிம்புகளில் குடி கொண்டிருக்கின்றன...
அந்த விளிம்பு முழுவதும் உன்
கறுப்பு - வெள்ளை விழிப்பூக்கள் நிறைந்து வழிய..

"ஒழிந்து போ"என்று
எனக்கு நானே  சாபமிட்டு கொள்கிறேன்...
இதைவிட பெரிதாய் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை..

No comments:

Post a Comment